நம் குரல்

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 12










சுகிர்தராணி - பாலியல் போரின் ஒற்றைச் சிறகு

http://koodu.thamizhstudio.com/thodargal_14_13.php



குட்டி ரேவதி

பலூன்











என் கையளித்த பலூன் நில்லாமல் மிதக்கிறது
பெரும் பரவசக் குமிழி போல
உடலிடுக்கில் பதுக்கிக் கொண்டு அலைகிறேன்
ஆகவே தரை தங்காமல்
எம்பி எம்பி மேகமாகிப் பார்க்கிறேன்
தோளால் விரலால் முட்டியால்
காலால் இடுப்பால் புட்டத்தால் என
அதை உதைத்து உதைத்து
என் களிப்புக்குச் சுவை கூட்டுகிறேன்
பலூன் கைகொள்ளாமல் காற்றுடன் மோகம் கொண்டு
எல்லா கதவுகளையும் தட்டுகிறது
சுவர்களையும் மோதுகிறது
எவரும் தொட்டுப் பற்றிக் கொள்ளத் துடிக்கிறார்
குதிக்கிறார் கைகளை நீட்டிப் பறித்துக் கொள்ள அலைகிறார்
எவருக்கும் அகப்படாமல்
எல்லோரையும் வான் நோக்க வைத்த அகந்தையுடன்
ஒரு பயணம்  போல
அகண்ட சூரியனின் கண் கூசும் வெளியில்
காலிடுக்கி சிறகின் கைகள் அகட்டி விண்ணேகுகிறேன்
அவரவர் தன் வீட்டுக்குள் நூல்கட்டி
இடுப்பை இறுக்கி அதக்கிய பலூன் நாடி
கதவைத் திறக்கிறார்
உள்ளே நுழையும் காற்று
பலூனை வெளியே அள்ளிப் போகாதிருக்க
கதவைப் பக்குவமாய் மீண்டும் சாத்துகிறார்
திருப்தியுடன்







குட்டி ரேவதி

பரத்தமை

ஆதிக்கச் சமூகத்தினர் கட்டமைத்த ஒடுக்குமுறை வடிவம்






செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ‘சங்க கால மகளிர்’ எனும் பொருளில் மூன்று நாள் (கடந்த மே 20 – 22) கருத்தரங்கை சென்னையில் நிகழ்த்தியது. பல தரப்பிலிருந்து வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவை, விளிம்பு நிலை மக்கள், பெண்பாற் புலவர்கள், ஆளுமைத் திறன்,  பெண்ணியம், பெண்மொழி, பாலின நோக்கு, இலக்கிய மாந்தர்கள், மகளிர் மாட்சி, கைம்மை, சமூகவியல் நோக்கு, பன்முக நோக்கு என்பவையாக இருந்தன. தொடக்கநாள் விழாவில், எழுத்தாளர் பாமா ஆற்றிய உரையை, இலக்கியப் பங்கேற்பாளர்கள் மிகச் சிறந்த உரை என்று சிலாகித்தனர். தவறவிட்டுவிட்டோமே என்ற வருத்தம் மேலிட்டது.

நான் பாலின நோக்கு எனும் அமர்வில், ‘பரத்தமையும் உடலரசியலும்: சங்க கால மகளிரின் உடல் பற்றிய கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ளல்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தேன். இதற்கு ஒரு வார உழைப்பு தேவைப்பட்டது என்றாலும், நிறைய மறைபொருள்களைக்  கண்டறிய முடிந்தது. சங்ககால இலக்கியங்களில் புலமை வாய்ந்த, அதை நுணுகி ஆராயத்தக்க பல நூறு பேராசிரியப்பெருமக்களையும் அற்புதமான சான்றோர்களையும் நாம் கொண்டிருக்கிறோம். அதன் விவரங்களையும், எத்தனை நூறு பாடல்களையும் மனனமாகச் சொல்லி, விளக்கக்கூடிய விரிவுரையாளர்களையும் நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், விவர அறிவையும் பொது அறிவையும் ஒரு செயல்திறமிக்க விஷயமாகவோ, படைப்பாற்றலாகவோ கருதமுடியாது இல்லையா? என் தரப்பு விவாதப் புள்ளிகள் கீழ்க்கண்டவையாக இருந்தன.


‘சங்ககாலப் பெண்கள்’ என்பவர்கள் எப்பொழுதுமே வியக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட புகழுடைய பெண்டிராக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மக்கள் மீது ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தும் வாய்ப்பு கொண்ட அரசின் கைகளில் தான் கலையும், படைப்பிலக்கியங்களும் இருந்திருக்கின்றன. அத்தகைய அரசு ஆவணப்படுத்திய இலக்கியங்கள் தாம் நம் கைகளில் கொடுக்கப்படுகின்றன. அவற்றைத் தான் நாம் இலக்கியம் என்று கொண்டாட வேண்டியிருக்கிறது.  

ஆண் என்பவன் தலைவனாகவோ அரசனாகவோ இருக்க, பெண்கள் குலமகளிர், தோழியர், பரத்தையர் என தன் காம நுகர்ச்சியை ஆணுக்கு வழங்கும் விதம் கொண்டு பல பிரிவினராக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதில், பரத்தையரும் பல பிரிவினராகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.

குலமகளிர், தோழியர், பரத்தையர், கைம்பெண்கள் இவர்கள் எல்லோருமே பெண்ணடிமைத்தனத்தின் குறியீடுகளாக ஆக்கப்பட்டிருப்பதன் விளக்கங்களைத்தாம் நாம் சங்கப்பாடல்கள் என்று கொண்டாடி வருகிறோம். மேற்கண்ட எல்லா வகைப்பெண்டிருமே, ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டை கொஞ்சமும் விழிப்பிலாது நுகர்பவர்களாய் இருக்கின்றனர்.

பரத்தையர்கள், ‘காம இன்பத்தை நுகரும் காமுகர்களாகிய பன்றிகள் உண்பதற்குரியதாய் விளங்கும் இரண்டு இதழ் அமைந்த வாய்க்குத் தொட்டியைக் கொண்டவளே’ என்று பிற பெண்டிரால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறாள். என்றாலும், கற்புடைப்பெண்டிரும், தோழியரும் எந்த தனியுரிமையும் அற்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.


தற்காலத்திலும் பாலியல் அரசியல் என்னும் நடவடிக்கையாக, பரத்தமை முன்வைக்கப்படுகிறது. இது தன் மீதான ஆணின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதே அன்றி வேறு இல்லை. கற்பைப் போன்றே அதற்கு நிகரானதொரு ஒடுக்குமுறை வடிவம், பரத்தமை. ஆதிக்கச் சமூகத்தினரால் முன் மொழியப்பட்டதும், வழிமொழியப்பட்டதும், ஆண்களின் நுகர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டதுமான வடிவம் பரத்தமை. இதிலிருந்து, திருநங்கைகளை மீட்டு,  அவர்கள் சம உரிமை பெறவும், நிலைநாட்டவும்  போராடி வருகிறோம் என்பதை இங்கு நினைவில் கொள்வோம்.


அத்தகைய பரத்தமை மற்றும் பிற ஒடுக்குமுறைகளின் நீட்சியைத் தான் நாம் இன்றும் பின்பற்ற, வற்புறுத்தப்படுகிறோம். இது, சங்ககாலப் பெண்டிரின் நிலையை நினைவூட்டிக் கொள்வதாலும், விதந்தோதப்படுவதாலும் நமது உளவியலுக்கு அதிகார நிறுவனங்களால் திணிக்கப்படுகிறது. சங்க காலப் பாடல்களில், ‘பரத்தமை’ என்பது ஆணாதிக்கச் சமூகத்தின் புத்துருவாக்க வடிவமாகவும், ஒரு சமூக மதிப்பாகவும் இருந்திருக்கிறது.


தொல்குடியின் பண்பாக இருந்த இனக்குழுச்சமூகம் உடைந்து நிலவுடைமைச் சமூகம் கட்டியமைக்கப் பட்டபோதும், அது சமூகத்தில் உறுதிப்பட்ட போதும், பெண் ஒடுக்குமுறையை கட்டமைக்கப் பெண்ணுடல் தேவைப்பட்டது. அதற்கு, ‘பரத்தமை’ எனும் தன் உடலை எதற்கும் வாய்ப்பாக அனுமதிக்கும் பெண்ணின் மனோநிலை தேவைப்பட்டிருக்கிறது.


சங்ககாலப் பரத்தையரின் யோனிகள், ஆண்களின் காம நுகர்ச்சிக்கென இருந்தனவே தவிர, தாய்மை, குழந்தைப்பேற்றை அனுபவிக்கும் உரிமையை, வாய்ப்பை பெறவில்லை. இதில், பெண்களின் பாலியல் ஆற்றல் முழுமையடையாமல் முற்றுமுழுதுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது.


தோழியர் எனும் பெண் பிரிவிற்கு, உடலே இல்லை என்பது போல, அவர்கள் வெறும் தலைவி, தலைவன், பரத்தையர் எனும் உறவுகளுக்கு இடையேயான ஊடகமாகவே சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர்.


பரத்தையருக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ வழங்கப்படாததால் அவர்கள் ஒடுக்கப்பட்ட இனக்குழுவைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும்.  ‘பரத்தமை’ எனும் வடிவத்தை தற்காலத்திலும் நாம் அங்கீகரிப்பதன் வழி, ஒடுக்கப்பட்டவர் மீதான ஆதிக்கத்தை அங்கீகரிக்கிறோம் என்றே பொருள்படும்.
இந்தக் கடைசிக் கூற்றிற்குத் தேவையானதோர் விவரமாகக் கீழ்க்கண்ட தகவலைக் குறிப்பிடுகிறேன்.
325 கி.மு.வில் பார்ப்பனர்கள் விவசாயிகளாகின்றனர். அப்பொழுது அவர்கள் படைகளில் சேர்ந்து பணிபுரிதலிலும் ஈடுபடுகின்றனர்.
269 கி.மு.வில், அரசனையும் சட்டத்தின் ஆளுகையின் கீழ்க்கொண்டு வரும் திட்டம் உருவாக்கப்படுகிறது.
563 கி.மு.வில், கெளதம புத்தன் செய்த மிகப்பெரிய சமூக மாற்றத்தையும் நாம் இங்கு நினைவில் கொள்வோம்.
185 கி.மு.வில் அசோகனின் அடுத்த தலைமுறையினர் தீவிரமாகப் பெளத்த கருத்தைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்த போது, புஷ்யமித்ர சுங்க என்பவன், புராண ராமனின் மறு உருவாக்கமாகக் கருதப்படுபவன், அசோகனின் பேரன் பிருஹதத்தனைக் கொன்று ஆட்சிக்கு வருகிறான். பெளத்தர்களையும் விகாரைகளையும் அழித்து, வருணவிவஸ்தாவை, சாதிய அமைப்பாக, அதன் அதிகாரப் படிநிலைகளுடன் நிலைநிறுத்துகிறான்.  
மேற்குறிப்பிட்ட கால அமைப்பு, சங்க கால இலக்கியங்களுக்குச் சமமான காலக்கட்டமாக இருந்திருப்பதால், அதன் தாக்கத்தை சங்க காலப் பாடல்களில் எவ்வாறு கண்டறிவது என்பதும், சங்க இலக்கியத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்விற்கு, அது ஆதிக்கத்தில் இருந்தவர்களின் படைப்புகளாக இருந்தமை தான் காரணமா என்பதும் நீண்ட ஆய்வுக்கட்டுரைக்கான விவாதமாகும்.



குட்டி ரேவதி

கனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும்



கனிமொழி கைது செய்யப்பட்டது, அவர் இழைத்த குற்றத்திற்கானதாக ஒரு புறம் இருந்தாலும், எனக்கு அதனுடன் பிணைந்த வேறு பல விஷய முடிச்சுகளையும் உடன் இழுத்து வருகிறது.


அரசியல் நோக்கிய நகர்வைப் பெண்கள் எளிதாக எடுத்து வைக்கமுடிவதில்லை. குடும்பம், தான் சார்ந்துள்ள சமூகம் போன்ற வெளிகளைத் தாண்டி, அல்லது அந்த வெளிகளைத் தனக்கான அளவில் சமாதானப்படுத்திவிட்டு, நிறைவு பெறச் செய்து விட்டுத்தான் அரசியல் என்ற ஆண்களுக்கு மட்டுமே என இருந்த வெளியை எட்டிப் பிடிக்க முடிந்தது. இன்று அது, தன் தந்தை, சகோதரர், கணவர் என்று யார் மூலமாகத் தனக்குச் சாத்தியப்பட்டாலும், அது இன்னும் ஆண்களின் வெளியாகவே இருப்பதைத்தான் உணர்த்துகிறது.



அந்த இடத்தின் மையம் வரை செல்ல முடிந்த பெண்கள், தங்கள் அணுகுமுறைகளிலும் செயல்பாடுகளிலும் ஆண்களைப் போலவே நடந்து கொள்வது சமூகத்தில் தன்னிருப்பு அல்லது தன்னையொத்த பெண்களின் நிலைமை குறித்த அவர்களின் அறியாமையையும் மடமையையும் தான் உணர்த்துகிறது.


சமூகத்தில், அரசியல் என்னும் மனித உரிமைகளைச் சட்டப்பூர்வமாகச் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடிய இடத்திற்கு சென்று சேரும் வாய்ப்புக் கிட்டிய பெண்கள் இப்படி தங்களின் செயல்களுக்கே இரையாகிப்போவது மற்ற பெண்களுக்குச் சோர்வையும், அவர்களின் நடத்தைகளில் இடர்ப்பாட்டையும் தரும். தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக் கொண்டது போல.


ஒரு பெண்ணியலாளர் இவ்வாறு கூறினார். “அரசியலுக்குச் செல்ல முடிந்த பெண்கள், இரு மடங்கு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒன்று, தனக்கான ஆளுமையைக் கட்டியெழுப்பிப் பேணுவதன் வழியாக, தன் சுயமரியாதையை நிலைநாட்டிக் கொள்வது. இன்னொன்று, தன்னையொத்த பெண்களின் உரிமைகளுக்கான பிரதிநிதியாகி நின்று போராடுவது”.


கனிமொழி, மற்ற பெண்களுக்கான பிரதிநிதியாகத் தன்னை நியாயப்படுத்தவும் இல்லை. தன் சுயமரியாதையையும் திடப்படுத்திக் கொள்ளவும் இல்லை. இது, பிற ஆணாதிக்க அரசியல்வாதிகள் விரித்த வலையாகவும் இருக்கலாம். அதில், கனிமொழி இரையாக மாட்டிக்கொண்டார் என்றும் சொல்லலாம். என்றாலும் அத்தகையதோர் அறியாமையைத் தனக்குள்ளே ஊட்டமளித்து வளர்த்து வந்தது யார் குற்றம்?  


கனிமொழி, பெண்களின் வரலாற்றில் ஒரு தவறான அரசியல் குறியீடு ஆகிறார். அவர் ஏற்படுத்திய அலை, அரசியலை நோக்கி நகர முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் தாக்கும், வீழ்த்தும். ஆதிக்க சாதியல்லாத ஒரு சமூகத்திலிருந்து அரசியல் பிரதிநிதியாக விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் இனி முதல் அடியிலிருந்து தான் தன் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்தை அளிக்கும். இது பொது மனித உளவியலை ஒரு நோயைப்போல தொடர்ந்து ஆட்கொள்ளும்.


அரசியலின் நீதி மன்றத்தில்,  “அவர் பெண்!” என்றாலும், “அவர் ஒரு குழந்தைக்குத் தாய்!” என்றாலும் அச்சொற்கள் அர்த்தம் பெறாது. எதிரொலிக்காது. ஏனெனில், ஏற்கெனவே, தன் குடும்பம், சமூகம் இரண்டையும் கடந்து தான், அதன் ஆழிகளைக் கடக்க முடிந்ததால் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி, அவர் எல்லா வகையிலும் ஒரு தனி மனுஷி!



“படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான்! ஐயோவென்று போவான்”. கவிஞன் பாரதி சொன்னது. கனிமொழியின் இந்நிலைமை வேதனையை அளிக்கிறது!


குட்டி ரேவதி

விதைகளைப் பதுக்கும் சதைத்த கனி





தனக்குள் விதையின் வேர்கிளைக்கும் வரை
விதைகளைப் பதுக்கியிருக்கும் சதைத்த கனி
அதையே ஊருக்குள் கதையென்றாக்கும்

காட்டில் வீழ்ந்தாலும் 
கருப்பையில் தகைந்தாலும்
விதையை விழித்தோ 
அவசியமெனில் அழித்தோ மரமாக்கி 
பழுத்த கனியும் ஆக்கிக் களிக்கும்
எம் பெருயோனி மரபிலோ
விதைகளை அவிப்பதுமில்லை
பதுக்குவதுமில்லை
உயிர்க்குலையின் கிளைகளில்
பால்பிடித்து தொங்கும் எம் கனிகளுக்கு
விதை ஒரு சாக்கு மரமும் சாக்கு
மகிழ்ச்சியை உடலாக்கிக் கொண்டாட
மீண்டும் மீண்டும் முலை பூரித்தக் கனிகளாய்
முறை வைத்து உருவாக்கி 
மரமெங்கும் பழுத்துத் தொங்குவதும் 
விதையை வினையால் கடந்து போவதும் 
எம் உடலின் இயல்பு


தனக்குள் விதையின் வேர்கிளைக்கும் வரை
விதைகளைப் பதுக்கியிருக்கும் சதைத்த கனி
தன்னைத்தானே வியந்து வியந்து 
அதையே செய்யும்
விரைந்தும் விதையைச் செய்யும்





குட்டி ரேவதி
நன்றி: 361 டிகிரி இலக்கியச் சிற்றிதழ்

ஜி. நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’




ஓய்வாகக் கிடைத்த ஒரு மணி நேரத்தில், மீண்டும் ஒரு முறை ‘குறத்தி முடுக்கு’ வாசித்து முடித்தேன். அந்த அளவிற்கான சிறிய நாவலே அது!


பாலியல் தொழிலுக்கேயான நெல்லையின் வள்ளிக் குறத்தி முடுக்கு என்னும் பகுதியில், நடைபெறும் கதையை, குறைந்த பக்கவெளிக்குள்ளேயே  சித்திரமாகப் பதியவைக்கும் ஜி. நாகராஜனின் திறன் அளவிலாதது. எங்குமே வார்த்தைகளை இறைக்கும் கவனக்குறைவு இல்லை.


ஒரு நிருபருக்கும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தங்கம் என்னும் பாலியல் தொழிலாளிக்கும் இடையிலான உறவைப் பற்றிய கதை. காதல், கல்யாணம் எனும் சமூக நிர்ப்பந்தங்களை ஆராய்ந்தவாறே நிருபர், அந்த உறவை அணுகுகிறார். தங்கமோ, தன் வாழ்க்கை திரும்பும் திசையெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இன்றி, அல்லது கட்டுப்படுத்தும் அதிகாரமின்றி அதன் போக்கிலேயே போகும் பெண்ணாக இருக்கிறார். பாலியல் தொழில் என்பதை மீறி, தங்கத்திற்கு நிருபரின் மீது சுரக்கும் உண்மையான அன்பு, அவரை அவளுடன் பிணைக்கிறது. வழக்கம்போல, தங்கத்தை அவள் கட்டுப்பாட்டில் இல்லாத வாழ்க்கை அவரிடமிருந்து பிரித்து இழுத்துச்செல்கிறது. அருமையான காதல் சுரக்கும் கதை! இணையாக ஒரு கிளைக்கதையையும் சொல்லியிருக்கிறார். கதை நெய்தலில் எங்குமே நூல் அறுந்து தொங்கவில்லை.


ஜி. நாகராஜனின் கதை விவரிப்பு, நூலை கீழே வைக்கமுடியாத விறுவிறுப்பைத் தருகிறது. தன் நெஞ்சத்தின் நேர்மையைத் தான் படைக்கும் கதாபாத்திரங்கள் வழியாகவெல்லாம் தொடர்ந்து கேள்வி எழுப்பும் முயற்சியையும், உழைப்பையும், ஈடுபாட்டையும் காட்டுவது சாதாரண விஷயமில்லை. சீரிய இலக்கியங்கள் என்ற வரையறையை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டுமோ என்று தோன்றுகிறது.


பாலியல் தொழிலின் பிரச்சனையை அவர் நேரடியாகப்பேசவில்லை. ஆனால், ஆழத்தில் அது தான் கதையாக்கப்பட்டிருக்கிறது. எங்குமே பிரச்சார வாடையும் இல்லை. பிரச்சனையை நேரடியாகச் சொல்லுகையில் அது மனித இதயங்களில் அழுத்தம் பெறாமல் போகிறது என்பது என் எண்ணம். அது மனித உறவுகள் வழியாக வெளிப்படும் போது தான், மனிதனின் இதயத்துள் இயங்கும் தர்க்க அறிதிறனுடைய புலன்கள் விழித்துக் கொள்கின்றன. அப்பொழுது, பிரச்சனையின் தட்டையான ஒற்றை முகம் மட்டுமே பதிவாகாமல் முழுப்பரிமாணமும் கூட புலனாகின்றது.


1963 – ல் இதன் முதல் பதிப்பு வெளியாகி அதன் பின்பு, பல வெளியீட்டாரால் தொடர்ந்து அச்சிடப்பட்டிருக்கிறது. நல்ல நாவலைத் தேடிப்படிப்பவர்கள், படிக்க வேண்டிய முக்கியமான நூல். படித்துவிட்டு படிக்க விரும்புவர்களுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்!




குட்டி ரேவதி

361 டிகிரி இலக்கியச்சிற்றிதழ் வெளியீட்டு விழா





கணையாழி, கல்குதிரை போன்ற இதழ்களின் புத்துருவாக்கத்தைத் தொடர்ந்து, 361 டிகிரி இதழ் உருவாக்கம் பெற்றிருக்கிறது. இவ்விதழின்  வெளியீட்டு விழா டிஸ்கவரி பேலஸ் புத்தகக்கடையில், இன்று மாலை நடைபெற்றது. இதழை, நரனும் நிலா ரசிகனும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். உருவாக்கத்திற்கும், வடிவமைப்பிற்கும் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக, கவிதைகளை நெருக்கித்தள்ளிப்போட்டு பக்கங்களை நிரப்பாமல் கவிதைகளுக்கு இடையே சுவாசிப்பதற்கும் இடைவெளிவிட்டிருக்கிறார்கள். நிறைய கவிதை ஆக்கங்கள் இடம்பெற்றிருப்பது இதழின் சிறப்பு. நேர்த்தியும் அழகும் மிக்கதொரு இதழாக வெளிவந்திருக்கிறது. அட்டைப்படங்களை ரோஹிணி மணி வரைந்திருக்கிறார். பார்வையை இழுக்கும் திரட்சியான கரித்துண்டால் வரைந்த ஓவியங்களாய் இருக்கின்றன. அவருடன் சில நிமிடங்கள் உரையாடுவதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. அது அவர் ஓவியங்களின் பின்னிருக்கும் அவரது சிந்தனைகளைத் தெளிவுபடுத்துவதாகவும் இருந்தது.



வெளியீட்டிற்குப் பின்பு கட்டுரைகளாகவும் உரைகளாகவும் கருத்துகள் வழங்கப்பட்டன. உரைகள் பெரும்பாலும் சிற்றிதழ்கள் பற்றியும் பெண் / ஆண் படைப்பாளிகளின் கருப்பொருள் பேதம் பற்றியும் இருந்தன. கவிதா முரளிதரன் தனது கருத்துகளை நிதானமானதொரு தொனியில் எழுதி வந்து வழங்கினார்.  அஜயன் பாலா, நிலவும் அரசியல் நெருக்கடிகளை இலக்கியவாதிகளின் படைப்புகளுடன் தொடர்புபடுத்திப் பேசினார். மற்றும் அய்யப்ப மாதவன்(இதழ் படைப்புகள் குறித்த விமர்சனம்), நேசமித்ரன்(இதழ் குறித்த திறனாய்வு), லக்ஷ்மி சரவணக்குமார் (சிற்றிதழ் பிடிவாதம் மீதான விமர்சனம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  







விழாவில் வலைப்பதிவர்களே பெரும்பாலும் கலந்து கொண்டது, சமூக வலைத் தொடர்புவடிவத்தின் தீவிரத்தை உணரத்தியது. இன்றும், சிற்றிதழுக்கான தேவை இருப்பதும், சிற்றிதழ் இயக்கம் இல்லாமல் போகையில் எழுத வருபவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கு வெளி இன்றி தனித்து விடப்படுவதும் குறித்து விழாவின் தொடக்கத்தில் நரன் உரையாற்றியதையும், மேற்குறிப்பிட்ட விஷயத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ளமுடிந்தது.  நிறைய படைப்பாளிகளின் ஆக்கங்களுடன் வருவது தான் இதழின் நோக்கம் என்பதற்கு நரன் அழுத்தம் கொடுத்தார். ”பெண் கவிஞர்” என்ற அடையாள வரம்புகள் அழிந்திருப்பதை இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுகையில் உணர்ந்தேன்.



முழுமையும் இச்சீரிய இதழ்கள், உருவாக்குபவர்களின் கருத்தாக்க வடிவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆக்கங்களுடனேயே உருவெடுக்கும். தொடர்ந்து வெளிவருகையில் அத்தகைய கருத்தாக்கத்தின் திசையை நோக்கியே பயணிக்கும். என்றாலும், 361 டிகிரி போன்ற இதழ்கள், தற்கால அரசியல் வெளியின் நுண்ணிய இடைவெளிகளையும் பேசும் இலக்கிய படைப்புகளுடன் வரவேண்டும் என்பது என் விருப்பம். இன்னும் தற்காலக்கவிதைகள், கவிதையியல் குறித்த தொடர் விவாதங்களுக்கான பக்கங்களையும் திறந்து வைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.  இவ்விதழுக்கு எவரும் படைப்புகளை அனுப்பிவைக்கலாம் என்று 361 டிகிரி இலக்கியச் சிற்றிதழ் குழு கூறுகிறது. தொடர்புக்கு: 361degreelittlemagazine@gmail.com





விழாவின் புகைப்படங்களுக்கு: https://picasaweb.google.com/onthemove31/361Release?authkey=Gv1sRgCOeGvbf6irPdaw#





குட்டி ரேவதி

நிலாச்சோறு

“முள்ளிவாய்க்காலுக்குப் பின்”  தொகுப்பை முன்வைத்து, ஈழக்கவிதை பற்றிய கலந்துரையாடல்



ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 11








மாலதி மைத்ரி - ஒளவை மொழி வெளிச்சம்

http://koodu.thamizhstudio.com/thodargal_14_12.php




குட்டி ரேவதி
நன்றி: தமிழ் ஸ்டுடியோ

தலை










நிறுவன மரத்தின் மண்டையில் ஏறியமர்ந்து
ஓலைச்சீற்றம் கொண்டவர்கள்
குரலெடுத்துக் கரைந்தபோது
மதிய வெயிலின் விறகுக்கட்டைகள்
கீற்றுகளைச் சுள்ளென்று எரித்துக்கொண்டிருந்தன
மனிதச் சலனங்கள் அழிந்து
வெட்டவெளியெங்கும் கானல்வெளிக்காட்சி
மரத்தின் ஒற்றை ஓலை வீழ்தலையும்
பெரும் விபத்தாய்க் கருதி
அவை அழுது ஓய்ந்த அம்மதியத்தில்
வேறெந்த மரமும் தலை திருப்பவில்லை அத்தோப்பில்
உயரத்தில் இருந்து கரைந்தாலே உசத்தியென்று
பின் வந்து மானுடக் காகங்களும் கரைந்தன
கத்திக் கத்திக் கரைந்தன
தரையிலிருந்து எம்பி எழும்பிக் குதித்து
சொற்கள் வற்றக் கத்தின
மரங்களின் மீது ஏணி சாய்த்து ஏறியமர்ந்த
சம்பவத்தைக் கண்டிராதோர் எல்லோரும்
காகங்களாய் மாறிக் கரைந்தனர்
எச்சில் பண்டங்கள் இறைக்கப்பட்ட வீதிகள் நோக்கிக்
காகங்கள் விரைந்தெழுந்து பறந்த போது
ஓலைகளெல்லாம் அடர்ந்து வீழ்ந்து
மரத்தின் மண்டை தரையில் உருண்டது
முண்டமாய் மெய்யுருவம் கொண்டு
கொளுத்தும் வெயிலில்
வானோக்கி வீணே நின்றது மொட்டை மரம்
ஒற்றையாய்.




குட்டி ரேவதி
நன்றி: 361 டிகிரி இலக்கியச் சிற்றிதழ்

இலக்கிய முஸ்தீபுகள்






விருதுகள் பெயரில் நடக்கும் அட்டகாசங்கள்,  எழுத்துப்பணியை முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தும் என்பது எழுதுபவர்களுக்கும் தெரியாமலா இருக்கும்? (எழுத்துப் பணி என்றால், தலையணை அளவுக்கு நூல்கள் எழுதுவது என்றும், ஃபேஸ் புக், டிவிட்டர், பிளாக் இன்னபிற சமூகத்தைப்பின்னும் வலைத்தளங்களில் தங்களின் விசிட்டர் எண்ணிக்கைகளையும் கமெண்ட்டுகளின் எண்ணிக்கைகளையும்  விருத்தி செய்துகொள்வதும் தினமும் எப்படியும் அப்டேட் செய்தே தீருவேன் என்ற அடம்பிடித்தலும் தான் என்ற மூட நம்பிக்கைகளைக் குறிப்பிடவில்லை, நான்!)




இப்படியான மன நெருக்கடியில் சிக்கிக் கொண்டவர்கள் மீள வழியும் இருக்கிறது. யாராவது விரும்பினால் முயன்று பார்க்கலாம். படிக்கவேண்டிய நூல்களை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றை வாசித்து முடித்துவிடுவது என்று வாசிப்பதில் ஈடுபடுவது தான். நிறைய வாசிப்பது, அபத்தமாக எழுதுவதைக் குறைக்கும். எழுத்தின் தரத்தையும் ரசனையின் தரத்தையும் கூட்டும்.



எழுத்தாளர்களைப் பட்டியலிடும் வேலையை எழுத்துலகப் பிதாமகர் ஒருவர் தான் தொடங்கி வைத்தார். (அவரது பெயரை என் வலைத்தளப் பக்கத்தில் உபயோகப்படுத்தி, இதை அழுக்காக்கிக் கொள்ள விரும்பவில்லை, மன்னியுங்கள்!)  அது அவருக்கு, இலக்கியத்தின் நிபுணத்துவ அந்தஸ்தைப் பெறுவதற்கும், பரமார்த்த குருவின் சீடர்களை உருவாக்குவதற்கும் தேவைப்பட்டது. இந்தப் ‘பட்டியல் கலாச்சாரம்’ இன்று வரை தொற்று நோயைப் போல பற்றிக் கொண்டு விட்டது. இப்பொழுது சர்வே எடுக்கிறார்கள், உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யாரென்று! இந்த ‘சர்வே கலாச்சாரத்’தால் உண்மையிலேயே ஆர்வம் இருப்பவர்களைத் தவிர புதிதாய் எவரும் இலக்கியத்தை வாசித்துவிடப்போகிறார்களா என்ன? தன்னைத் தானே கூவி விற்கும் வியாபாரத்தந்திரம் தான், ‘சர்வே’, ‘பட்டியல்’ இவை பின்னாடி கண்சிமிட்டுகிறது!




‘பெயரில்லா’ என்று பெயரிட்டு எனக்கு வரும் கருத்துரைகளையும் மின்னஞ்சல்களையும் நான் பொருட்படுத்தப் போவதும் இல்லை. அவற்றைப் பிரசுரிக்கவும் விரும்பவில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அந்த அளவிற்குக் கூட நெஞ்சுரம் இல்லாதவர்கள் பின் ஏன் என் வலைப்பக்கத்தை வாசிக்கிறார்களாம்? போகிற போக்கில் என் பக்கத்தைப் புரட்டியவர்களாக இருக்கும் போல!




பால் நியூமேனின் விவகாரம் சூடுபிடித்து, எழும்பிய வேகத்தில் அணைந்து விட்டது. அது தொடர்பான இலக்கியப்பத்திரிகை பற்றிய குறிப்போ இது என்று யாரும் ஆர்வமடைய வேண்டாம். பால் நியூமேனின் மறுப்புக் கடிதம் வலிமையானதொரு மொழியில் எழுதப்பட்டிருந்தது தான் குறிப்பிடத்தக்க சேதி! உண்மையிலேயே சிறந்ததொரு கடிதம்! மனிதனின் மனோபாவங்களும் நடத்தை முறையும் தான் அவன் ஆளுமைக்கு அழகு கூட்டுகின்றன.




‘அரசுக்கு எதிராகத்’ தாங்கள் கலை இலக்கியப் பணியை ஆற்றுபவர்கள் என்ற கற்பிதத்துடன், கற்பனையையும் கொண்டிருப்பவர்கள் சுவருடன் தன் முஷ்டியால் மோதும் காட்சியை எனக்குப் பரிசளிக்கிறார்கள். அரசியல் புரியாதவர்கள்! சமூகச்சீர்திருத்தமே அரசியலைத் திருத்தம் செய்யும் அடிப்படையான பணி என்று அம்பேத்கர் சொன்னதை ஒரு முறை அவர்களை நினைவுபடுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறேன்! அல்லது, அத்தகையதொரு அருமையான பணியைத் தாங்கள் ஆற்றும் போது நானும் ஏன் அப்பணியிலேயே என்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.  உங்கள் கூட்டமே ஒரு நூற்றாண்டுப் புரட்சிக்குப் போதுமானது! இதில் நான் வேறா? (என் மின்னஞ்சலுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதும் பெயரில்லா மனிதருக்கு இப்பதில்!)    சேகுவேரா, மார்க்ஸ் அச்சிட்ட பனியனை அணிந்தாலே புரட்சி நடந்துவிடும் என்ற உங்களின் மூடநம்பிக்கை பலித்தால் எனக்கும் மகிழ்ச்சியே!




குட்டி ரேவதி

இரவின் சுடும் மூச்சு





 



ஆயிரம் தாமரைகள் அடுக்கிய யாக்கை
வன்மம் தவிர்த்தது எம் இனம்
 
நோயிலும் போயினும்
வல்லாங்கு ஆற்றுதல் உம் குணம்
யோனிகளைத் தம் குதிராக்கி
எம் ஆடவர் குறிகளறுத்து
தம் தேகம் பொருத்தியும் சேமித்தும்
அழகு பார்க்கும் உம் கண்ணாடிகள் தாம் 
புரட்சியென்ற எச்சில்கள் குமிழிடும்
காலமென்ற நீர்மவெளிகள்
 
நகரங்களின் இரவைப்போல்
ஏக்கங்களால் கரடுதட்டிப்போன கல்குகைகள்
பதுக்கிய உமதுடல்கள்
சீழ்க்கைகளால் இரவைத் திறக்கும்
கிக்கோலோ நுழையும் வீடுகள் அவை
 
முதுமக்கள் தாழிகளில்
இரத்தக்கறை வரைந்த குகைஓவியங்களின்
காலப்பாறைகளில்
உறங்கி அடங்கும் எம் யோனிகளில்
உமது பொய்க்குறிகள் கீறிக்கசிந்த குருதியின் மூச்சு
 
என்றாலும் இரவும் நமது
இருளின் மீதூறும் நிலவும் நமது
உறவைப் பெருங்களிப்பாக்கும்
உயிர் மது சுரக்கும் 
யோனியின் திண்மையும்
பூக்கும் விடுதலையும் மட்டும்
எமது எமது






குட்டி ரேவதி
நன்றி: கல்குதிரை